எப்.சீ.ஐ.டீ க்கு போக நான் தயார் – மோசடி பொய் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆறுமுகன் சவால்!

0
114

அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி மன்றத்தில் நிதி மோசடி தொடர்பாக நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு (எப்.சீ.ஐ.டீ) முறையிட்டுள்ளதாக ஊடகங்களில் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நிதி மோசடி தொடர்பில் எப்.சீ.ஐ.டீ என்னை அழைத்தால் அதற்கு முகங்கொடுக்க நான் தயார். இந்த மோசடி பொய் என்றால் அவர்களுக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூப்படுத்தும் சந்திப்பு ஒன்று 25.01.2018 அன்று இடம்பெற்றது.

இதன்போது இதில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி மன்றத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக நிதி மோசடி விசாரணை பிரிவில் எமக்கு எதிராக முறைபாடு செய்யப்பட்டுள்ளமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

எந்த நேரத்தில் எந்தவோர் சந்தர்ப்பத்தில் எமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சினைகளுக்கு நாம் அதற்கு ஏற்றப்போல் முகங்கொடுக்க தயாராகவுள்ளோம்.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிதி மோசடி என சொல்லிக்கொண்டு இப்பொழுது முறைபாடுகள் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு தெரிவித்துள்ள இவர்கள் கடந்த மூன்று வருட காலப்பகுதியிலும் சரி, கடந்த வருடத்திலும் சரி தூங்கிக்கொண்டு இருந்தார்களா என இவர் கேள்வியும் எழுப்பினார்.

அத்தோடு எதிர்வரும் தேர்தலில் சேவலுக்கும், வெற்றிலைக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தேர்தலில் வெற்றியை பெற்றுக்கொள்வதற்காக இந்த கபட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என எண்ணுகிறேன்.

ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சை ஜனாதிபதியே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கியுள்ளார்.

இது ஒரு புறத்தில் வெற்றியாக அமைந்துள்ளது. ஆனால் ஊவாவில் தமிழ் ஆசிரியை ஒருவருக்கு நேர்ந்த கதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது.

ஆனால் இத் தமிழ் ஆசிரியை ஒருவருக்கு எதிராக மட்டுல்ல அனைத்து தமிழ் அதிகாரிகளுக்கும் இவ்வாறான ஒரு நிலையை எவர் உருவாக்கினாலும்வு அதை இ.தொ.கா வன்மையாக கண்டிக்கும்.

ஊவா தமிழ் கல்வி அமைச்சு செந்தில் தொண்டமானிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பாக அமைந்திருந்தாலும், அதை சிலர் கீரியிடமிருந்து நரியிடம் கொடுத்துவிட்டார்கள என வர்ணிக்கின்றனர். இதை வர்ணிப்பவர்களும் ஒரு மிருகத்தை சேர்ந்தவர் தான்.

ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சை இ.தொ.காவின் அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக அட்டனில் ஆர்ப்பாட்டம் செய்வது எந்தவகையில் பொருந்தும். இவ்வாறு சக்தி படைத்தவர்கள் ஊவாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கலாம் தானே. சக்தியற்றவர்கள் இவ்வாறு தான் தெரிவிப்பார்கள்.

மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது வெற்றியை உறுதி செய்யும் வகையில் சேவல் சின்னத்திலும் குறித்த சில பகுதிகளில் வெற்றிலை சின்னத்திலும் களம் இறங்கியுள்ளது.

தற்போதைய நிலவரத்தின் படி சேவல் மற்றும் வெற்றிலை சின்னங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகியே காணப்படுகின்றது. தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் படி சம்பள உயர்வின் போது வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை ஒரு தொழிலாளிக்கு 88500 ரூபாய் ஆகும். ஆனால் இந்த தொகை தொழிலாளர்களுக்கு கிடைப்பதற்கு பாராளுமன்றத்தில் 2500 ரூபாய் முற்கொடுப்பனவு பெற்றுதருவதாக கைச்சாத்திடப்பட்ட நிலையில் இது தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு அரிதாகிவிட்டது.

ஆனால் தொழிலாளர்களுக்கு சேர வேண்டியதை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும். சம்பள நிலுவை கொடுப்பனவு தொடர்பாக பாராளுமன்றத்தில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அமைச்சர்களும் கையொப்பம் இட்டிருக்கார்களே தவிர நான் கையொப்பம் இடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் பெருந்தோட்ட கம்பனிகளிலிருந்து எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை ஊடகங்களுக்கு ஆதரமாக தருகின்றேன் என பத்திரத்தையும் எடுத்துக்காட்டி அதில் குறிப்பிட்டிருந்ததை வாசித்தார்.

1300 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சொல்லுகின்றார்கள் அது உண்மையா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் 800 மில்லியன் ரூபாயே எனக்கு வழங்கினார்கள் என்றார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here