புதிதாக பிரதேச சபையினை உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுளா கிறிஸ்டிராஜ் தெரிவித்துள்ளார். நோர்வூட் பிரதேச சபையின் முதல் நாள் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புளியாவத்தை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இன்றைய (10.04.2018) அமர்வில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில்
இலங்கையில் 200 வருட கால வரலாற்றினை கொண்டுள்ள இந்திய வம்சாவளி மலையக மக்கள் ஏறத்தாழ 12 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் நுவரெலியா மாவட்டத்திலேயே செறிவாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் சில பிரதேசங்களில் 10000 பேருக்கு ஒரு பிரதேசசபை காணப்பட்டபோதிலும் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 200,000 பேருக்கு ஒரு பிரதேசசபை என்றடிப்படையிலேயே காணப்பட்டது. இந்த நிலையினை மாற்றியமைத்து புதிதாக பிரதேச சபைகளை உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணி தலைமைகளுக்கும் மலையக மக்கள் சார்பில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
புதிததாக பெற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நோர்வூட் பிரதேசபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதையடுத்து மகிழ்ச்சியடைகின்றேன். 1998ம் ஆண்டு இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தில் காரியாலய உத்தியோகஸ்தராக அரசியல் பிரவேசத்தை தொடங்கி இன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான கௌரவ.பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலிலும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.திலகராஜா அவர்களின் வழிகாட்டலிலும் ஒரு பிரதேசசபை உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்ற களமிறங்கியிருக்கின்றேன். ஒரு பெண் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதென்பது இலங்கையை பொருத்தமட்டில் குடும்ப அரசியல் பின்புலம் இருப்பின் மாத்திரமே சாத்தியமாகும்.
ஆனால் இன்று அரசியல் பின்புலமற்ற நிலையில் தோட்ட தொழிலாளியின் பிள்ளையாகிய நான் அரசியலில் பிரசேவம் செய்து பிரதேசசபை உறுப்பினராகியிருக்கின்றமை கடும் பிரயர்த்தனத்திற்கு மத்தியிலாகும். ஈழத்து இலக்கியத்தில் மிக முக்கியமான ஆளுமையான மலையக கவிஞர் குறிஞ்சி தென்னவன் பிறந்த தென்மதுரை வட்டாரத்தில் போட்டியிட்டு நேர்மையான முறையில் 1079 வாக்குகளை பெற்றுக் கொண்டேன். வட்டார வெற்றி மூலமாக தெரிவு செய்யப்படவில்லையென்றாலும் எனக்கான அரசியல் அங்கீகாரத்தினை வழங்கி தேசிய பட்டியல் மூலம் பிரதேசசபை உறுப்பினராக தோழிலாளர் தேசிய சங்கம் தெரிவு செய்துள்ளது. இதனை வாய்ப்பாக கொண்டு எனக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரமின்றி எல்லா உறவுகளுக்கும் தொழிற்சங்க, அரசியல் பேதமற்ற முறையில் சேவையாற்றுவேன் என்பதை இச்சபையில் தெரிவித்து கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.