நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரமான அரசியல் மாற்ற சூழ்நிலையில் வெள்ளி மாலை வெளிவந்த கையோடு தொழிலாளர் தேசிய சங்க்கத்தினதும் முன்னணியினதும் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஆகியோர் எடுத்த உடனடி தீர்மானங்களை தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் முன்னணியினதும் ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாகவும் எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னணியின் நிதிச் செயலாளருமான எஸ். பிலிப் தெரிவித்து உள்ளார்.
சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாட தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர் பீட உறுப்பினர்கள் நேற்று (29/10) சங்கத்தின் ஹட்டன் தலைமையகத்தில் ஒன்று கூடினர். இந்த கூட்டத்திற்கு தலைமைவகித்து உரையாற்றியபோதே பொதுச்செயலாளர் பிலிப் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், தொழிலாளர் தேசிய சங்கத்தினை 2006 முதல் மீள் எழுச்சிப்பாதையிலே இட்டுச்சென்றது தலைவர் திகாம்பரம் பொதுச் செயலாளர் திலகர் ஆகிய இருவருமேயாகும். அப்போதெல்லாம் இக்கட்டான சூழ்நிலைகளில் சவால்கள் நிறைந்த முடிவுகளை அவர்கள் எடுத்தபோது நாம் வழங்கிய ஒத்துழைப்பு எமது அமைப்பின் எழுச்சிக்கே வலு சேர்த்தது. எனவே இன்றைய தீர்க்கமான அரசியல் சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு கட்சியினதும் தொழிற்சங்கத்தினதும் உயர்பீட உறுப்பினர்கள் எமது ஏகமனதான ஆதரவை தெரிவிப்பதுடன் இந்த தகவலை கீழ்மட்டம் வரை கொண்டு செல்லவேண்டும் என கேட்டுக்கொண்டார் கொண்டார்.
பிரதி நிதி செயலாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.ஶ்ரீதரன் :
எம்மை வழிநடாத்தும் தலைவர் எப்போதும் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுபவர். எனவே இந்த அவசர சூழ்நிலையில் ஹட்டனில் நடைபெறும் கூட்டத்திற்கு அவர் வருகை தராதபோதும் அவரது செயற்பாடுகளை தீர்மானம் எடுக்கும் ஆற்றலை அதிகரிக்கும் வகையில் எமது ஆன்ம பலத்தினை நாங்கள் ஒன்று கூடி இங்கே வெளிப்படுத்தி நிற்கின்றோம். நாம் எப்போதும் அவர் வழியில் பயணிக்க தயாராகவே உள்ளோம் என்றார்.
தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் :
தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் தொழிலாளர் தேசிய முன்னணியினதும் உறுப்பினர்கள் மன உறுதியோடும் திடசங்கடபத்தோடும் உள்ளனர். தாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதற்கும் அஞ்சாத சிங்கம் திகாம்பரம் என்பதை அவர் பல முறை நிரூபித்து காட்டியவர் அவர். இன்றைய திகதியில் தலைநகரில் தங்கி முக்கிய சந்திப்புகளை நடாத்தும் தலைவரினதும் செயலாளரினதும் பிரதி தலைவர் உதயாவினதும் கரங்களைப் பலப்படுத்தவே நாம் இங்கே ஒன்று கூடியுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பட்டாசு கொளுத்தி யாரும் எங்களை அச்சுறுத்த முடியாது. நாம் எதற்கும் தயாராகவே உள்ளோம். தலைமைத்துவம் எடுக்கும் தீர்மானங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டு உரிய நேரத்தில் உரிய விதத்தில் ஒன்றுபட்டு செயல்படுவோம் என தெரிவித்தார்.
இளைஞரணி தலைவர் சிவனேசன்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் தோட்டத்தொழிலாளர்களாக இருக்கலாம். ஆனால் தொழிலாளர் தேசிய முன்னணியில் தோட்டத் தொழில் செய்யாத ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். அதனால்தான் எமது தலைவர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கடந்த தேர்தலில் வெற்றிபெற்றார். கூடவே எமது செயலாளரும் அதிகபடியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றனர். அங்கு சென்றவர்கள் முறையாக அவர்களது கடமையை செய்தார்கள். அமைச்சராக தலைவர் திகாம்பரமும் பாராளுமன்ற உறுப்பினராக செயலாளர் திலகரும் செய்த பணிகளை மலையக வரலாறு மறக்காது. அதனை மறைக்க எவராலும் முடியாது. இளைஞர் சக்தி எங்களோடு. எந்தப் பக்கம் நின்றாலும் எங்கள் தலைவன் பக்கம் நிற்பதே எங்கள் லட்சியம். இந்த நேரத்தில் எங்களை விலைபேசும் கேவலம் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் அப்படி விலைபோக கூடியவர்கள் அல்ல. பந்தா காட்டி எங்களை அச்சுறுத்தவும் முடியாது. எதனையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம் என்றார்.
இந்த சந்திப்பில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங்.பொன்னையா, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மாதர் அணியினர், தொழிற்சங்க உத்தியோகத்தர்கள் பலரும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நோட்டன் பிரிட்ஜ் நிரபர்