மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக அதானி குழுமம் செலுத்திய தொகையில் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையை மட்டுமே அரசாங்கம் மீண்டும் செலுத்தும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நேற்று தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், அதானி குழுமம் எரிசக்தி அதிகார சபைக்கு குறித்த திட்டத்திற்கான வைப்புத்தொகையை செலுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
அதானி குழுமம் அரசாங்கத்திடமிருந்து ஆரம்ப செலவுகளைக் கோரியதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
எந்தவொரு திட்டமும் திரும்பப்பெறக்கூடிய மற்றும் திரும்பப்பெற முடியாத வைப்புத்தொகைகளை உள்ளடக்கியது என்றும், அரசாங்கம் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகைகளை மட்டுமே திருப்பிச் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகைகள் எவை என்பதை தீர்மானிக்க நிலைபேறான எரிசக்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.




