ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் முடக்கம் காரணமாக ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துப் பொதுச் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று வியாழக்கிழமை (26) பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தொழிநுட்பக் கோளாறு காரணமாக திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கணினி அமைப்பினை மீண்டும் வழமைக்குக் கொண்டு வரும் வரை, நாளை வெள்ளிக்கிழமை (27) முதல் மறு அறிவித்தல் வரை அடையாள அட்டை வழங்கும் சேவைகள் மற்றும் ஏனைய பொதுச் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள அலுவலகங்களுக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




