ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஒரு வாரம் இடம்பெற்ற கடுமையான மற்றும் கொடிய மோதல்களைத் தொடர்ந்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்தை ஏற்று கொண்டுள்ளன.
அத்துடன் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் “இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகளை நிறுவுவதற்கும்” ஒப்புக்கொண்டதாக கட்டார் வெளியுறவு அமைச்சு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்தது.
“போர்நிறுத்தத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அதன் செயல்பாட்டை நம்பகமான மற்றும் நிலையான முறையில் சரிபார்க்கவும்” எதிர்வரும் நாட்களில் தொடர் கூட்டங்களை நடத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக கட்டார் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மிக மோசமான மோதலில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு பச்சை கொடி காட்டி இருந்தன.
இதற்கமைய வாக்குறுதியளித்தபடி, பாகிஸ்தான் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் இன்று தோஹாவில் நடைபெறும்” என்று ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் முன்பு கூறியிருந்தார்,
அத்துடன் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழு கட்டார் தலைநகருக்கு வந்தடைந்ததாக அவர் கூறினார்.
இதேநேரம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு முன்னதாக, நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ஆப்கானிஸ்தானின் தலிபான் தலைமையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாக கூறியது.
மேலும் “ பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும்” என்று வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் எல்லை தாண்டிய தாக்குதல்களை தீவிரப்படுத்திய கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியதைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய மோதல் மற்றும் அவர்களின் 2,600 கிமீ (1,600 மைல்) எல்லையில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டன. போராளிகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பான புகலிடங்களிலிருந்து செயல்படுவதாகக் பாகிஸ்தான் கூறியது.
எனினும் பாகிஸ்தானைத் தாக்க ஆயுதமேந்திய குழுக்களுக்கு புகலிடம் அளிப்பதை தலிபான் மறுத்துள்ளது, மேலும் பாகிஸ்தான் இராணுவம் ஆப்கானிஸ்தான் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்) தொடர்பான போராளிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இதேநேரம் ஆப்கானின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்குள் ஆயுதமேந்திய குழுக்கள் தங்கி, பாகிஸ்தானுக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போர் தொடுத்து, அரசாங்கத்தை கவிழ்த்து, அதன் கடுமையான இஸ்லாமிய நிர்வாக முறையைக் கொண்டு அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை, எல்லை அருகே நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
“ஆப்கானிஸ்தானில் புகலிடங்களைக் கொண்ட மற்றும் பாகிஸ்தானுக்குள் கொடூரமான தாக்குதல்களை நடத்த ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தும் பினாமிகளை ஆப்கானிஸ்தான் ஆட்சி கட்டுப்படுத்த வேண்டும்” என்று பாகிஸ்தான் ராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் சனிக்கிழமை ஆற்றிய உரை ஒன்றில் குறிப்பிடத்தக்கது.