டி20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
எனவே, இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கே முக்கியத்துவம் பெறுகின்றது.
முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.
நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தானுக்கு அரைஇறுதிக்கான கதவு திறந்துள்ளது.
எனவே, இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி கண்டு, நிகர ஓட்ட விகிதத்தில் நியூசிலாந்தை முந்தினால் அரைஇறுதி வாய்ப்பை பெற்று விடும்.
பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடினால் குறைந்தது 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
2-வது பேட்டிங் செய்தால் 13.1 ஓவருக்குள் இலக்கை விரட்டிப் பிடிக்க வேண்டும்.
கண்டி, பல்லேகல மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.




