எரிபொருள் விலை குறைப்பானது மக்களுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும். இத்தருணத்தில் தொழிற்சங்கங்கள் தங்கள் சுயநலத்தை கைவிட்டுவிட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு செயல்பட வேண்டுமென ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
எமது நாடு கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் இருந்த நிலைமையை அனைவரும் அறிவார்கள். எங்கு பார்த்தாலும் மக்கள் வரிசையில் நின்றே பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. எரிபொருளை பெற்றுக்கொள்ள நாள் கணக்கில் மக்கள் வரிசையில் இருந்த யுகத்தை மாற்றி இன்று எரிபொருள் விலையை குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்கும் யுகத்துக்குள் நாட்டை ஜனாதிபதி கொண்டுவந்துள்ளார்.
எரிபொருள் விலை குறைந்தால் போக்குவரத்து செலவுகள் குறையும். ஆதனால் பொருட்களின் விலைகளும் குறையும். அதேபோன்று சர்வதேச நாயண நிதியம் இலங்கைக்கு வழங்கியுள்ள கடன் வசதிகள் ஊடாக நாடு வழமைக்குத் திரும்பு நிலை உருவாகியுள்ளது. மக்கள் எதிர்கொண்ட பல்வேறு துன்பங்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் காலம் மெல்ல மெல்ல உருவாகிவரும் சூழலில் தொழிற்சங்கங்களும் இதற்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் சிக்கியுள்ள தொழிற்சங்கங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்துத் திட்டங்களையும் எதிர்ப்பது சுயநலமானது. மக்களின் வாழ்க்கைச் செலவு குறை வேண்டுமெனில் தொழிற்சங்கங்களும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அதனைவிடுத்து மக்களின் துயரத்;தில் அரசியல் செய்ய வேண்டாம். தேவையற்ற போராட்டங்களை செய்து மீண்டும் நாட்டை பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் எஸ்.ஆனந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.