நாட்டில் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்ற காரணத்தையொட்டி மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட போஷாக்கு கூப்பன் இடைநிறுத்தப்பட்டுள்ளமை எதிர்கால சந்ததியினரையே பாதிக்க செய்யும் எனவே உடனடியாக மீண்டும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு கூப்பனை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் இல்லையென்றால் பாரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மலையக தொழிலாளர் முன்னணி நிதிச்செயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நாட்டில் அனைத்து பொருட்களுக்குமான விலை மலைபோல உயர்ந்து நிற்கின்றது.இதனால் பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை காணப்படுகின்றது.குறிப்பாக மலையகத்தில் பொருளாதாரம் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் கர்ப்பிணி தாய்மார்கள் போஷாக்கான உணவுபொருட்களை பெற்றுக்கொள்வதிலும் பெரும் சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இவ் பேரிடியான நேரத்தில் இப்போஷாக்கு கூப்பனை இடைநிறுத்தியுள்ளமை பெரும் சிக்கல்களை கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலை தொடர்ந்தும் நீடிக்குமானால் போஷாக்குஅற்ற குழந்தைகள் பிறப்பதற்கான சூழல் உருவாகும் அதே நேரத்தில் குறைமாத பிரசவங்களும் பிரசவிக்க நேரலாம்.இதனால் எதிர்காலத்தில் பிறக்கும் பிள்ளைகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட அதிகமாகவே வாய்ப்பு உள்ளது.எனவே இடைநிறுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான மாதந்தோறும் வழங்கும் போஷாக்கு கூப்பனை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் இல்லாவிடின் மிகப்பெரிய போராட்டத்தை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்க தயங்கப்போவதில்லையென புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்




