கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை மேபில்ட் தோட்டம் தொடக்கம் பத்தனை வரையான பிரதான வீதிகளில் உள்ள பஸ் நிலையங்களை சீரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் முறையாக சீரமைக்கப்படாமையால் பல்வேறு தரப்பினரும் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களது தலையீட்டில் ‘கிளீன் சிறி லங்கா ‘வேலைதிட்டத்தின் கீழ் இந்த புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் மேபீல்ட் தோட்டம் தொடக்கம் பத்தனை வரையான அனைத்து பஸ் நிலையங்களையும் சுத்தப்படுத்தி பஸ் நிலையங்களை சீரமைத்து கொடுக்கும் முகமாக புனரமைப்பு வேலைதிட்டம் இன்று சனிக்கிழமை கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், வர்த்தக சங்கத் தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் ஆரம்பமானது.
மேற்படி புனரமைப்பு பணிகள் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலைக்கு அருகாமையிலுள்ள பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகியது.
இப் புனரமைப்பு பணியை ஆரம்பிக்கும் நிகழ்வில் பத்தனை தலைமை பொலீஸ் பொறுப்பதிகாரி, கொட்டகலை பிரதேச கிராம சேவகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிக, பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
(எஸ்.ரோஷன்)




