கொலை குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவருக்கு பலப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
விஜயமுனி தர்ஷன தினேஷ் டி சில்வா (37) மற்றும் லத்துவஹந்தி ரங்க பிரதீப் டி சில்வா (41) ஆகியோரே இவ்வாறு தண்டனை பெற்றவர்களாவர். இவர்கள் இருவரும் கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 04ஆம் திகதி பலப்பிட்டிய, மதுவ பகுதியில் வைத்து பொரவகமகே மனோஜ் சம்பிக்க குமார என்பவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த போது முதலாம் நபருக்கு 16 வயதும், இரண்டாம் நபருக்கு 30 வயதுமாக இருந்தது. அம்பலாங்கொட, தல்கஸ்கொட பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். சுற்றுலா செல்வதாகக் கூறி முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய குறித்த நபர்கள், அவரை வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்தார். அரச சட்டத்தரணி செனுரி குணசேகர இந்த வழக்கில் அரச தரப்பில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




