கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளைய தினம் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கடந்த ஓராண்டில் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுவது இது இரண்டாவது முறையாகும்.
இறுதிப் போட்டிக்காக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், போட்டியின் ஆரம்பத்துக்காக விசேட கலை மற்றும் வரவேற்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வேகம் மற்றும் பந்து எழும்புதலை வழங்கக்கூடியதாக உள்ளதாக நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
200 ஓட்டங்கள் என்பது இந்த மைதானத்தில் பாதுகாப்பான இலக்காக இருக்கும் எனவும் நடுவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய அணி இத்தொடரில் இந்த மைதானத்தில் இரு போட்டிகளில் விளையாடியுள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.
நியூசிலாந்து அணி இத்தொடரில் அகமதாபாத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. அதில் தென் ஆபிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியிருந்தது.
நாளைய போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. நியூசிலாந்து அணி ஏற்கனவே அகமதாபாத் சென்றடைந்து தனது பயிற்சிகளைத் தொடங்கியுள்ளதுடன், இந்திய அணி இன்று தனது பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியிருந்ததுடன், இந்தப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அணி கிண்ணத்தை வென்றிருந்தது.
அந்தப் வெற்றியை தக்கவைக்கும் முனைப்புடன் இந்திய அணியும், முதல் முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் இந்தப் போட்டியில் களங்காண உள்ளன.




