டெஸ்ட் தொடரை கைப்பற்றப்போவது யார்! – இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது போட்டி இன்று!

0
5

தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணிக்கும், நஜ்முல் ஹொஸைன் சாண்டோ தலைமையிலான பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரு போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று (25) கொழும்பு எஸ்.எஸ்.சி கிரிக்கெட் மைதானத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

இலங்கைக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், தலா 3 போட்டிகள் வீதம் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச தொடர்களில் மோதுகிறது. டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஒருநாள் தொடர் ஜூலை 2ஆம் திகதியும், டி20 சர்வதேச தொடர் ஜூலை 10ஆம் திகதியும் ஆரம்பமாகிறன.

கடந்த 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இதன் மூலம் 3 வருடங்களின் பின் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் சமநிலையில் நிறைவுக்கு வந்ததுடன், காலி மைதானத்தில் 12 வருடங்களின் பின் டெஸ்ட் போட்டியொன்று முடிவற்றதாக மாறியது.

இன்று ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இரு அணிகளுக்கு மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி 1-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றும். இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இருதரப்பு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் ஒரே ஒரு தொடர் மாத்திரம் சமநிலையில் நிறைவடைந்தது. அது 2017ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையானது.

இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பங்களாதேஷுடன் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக இருதரப்பு தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் அதேவேளை, பங்களாதேஷ் அணியின் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இலங்கையுடன் இருதரப்பு டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here