தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் டாப்சி பன்னு. திருமணத்திற்கு பிறகும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்சி திரையுலகில் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து அவர் கூறும்போது, “பாலிவுட் சினிமா நடிகைகளின் மார்பழகையும், தென்னிந்திய சினிமா நடிகைகளின் இடையழகையும் அதிகம் வெளிக்காட்டுகிறது என்று நான் கூறியது வேறு மாதிரியாக சென்றுவிட்டது.
பெண்களை ஒரு குறிப்பிட்ட பார்வையில் மட்டுமே அணுகுகிறார்கள் என்பதுதான் இங்குள்ள முக்கிய சிக்கல். எந்த சினிமாவாக இருந்தாலும் சரி, நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே, பார்க்கவே விரும்புகிறார்கள். அது என்ன வகையான ஈர்ப்பு என்று எனக்கு தெரியவில்லை.
இந்தி சினிமாவில் நான் பெரியளவில் கவர்ச்சி காட்டவில்லை. எனவே என்னிடம் யாரும் அப்படி கேட்டு வந்ததில்லை. சில படங்களில் கவர்ச்சி காட்டுமாறு இயக்குனர்கள் என்னிடம் சங்கடத்துடன் தெரிவித்துள்ளார்கள். இது எனக்கும் சங்கடங்களை வரவழைக்கும். இயக்குனர் என்பவர் கப்பலின் கேப்டன் போன்றவர். எனவே இயக்குனர் சொல்வதை, வரம்பு மீறாத வகையில் நடிகைகள் கேட்டு நடிக்கிறார்கள். முன்னணி நடிகையாக எல்லா விதமான நடிப்பையும் வெளிக்காட்டுவது அவசியம்” என்று கூறியுள்ளார்.




