தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுத்து இன்று ஒரு வருடத்தினை அடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு இது வரை முழுமையான சம்பளத்தினை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றன.கூட்டு ஒப்பந்தம் ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேலான நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
அதில் 20 கோரிக்கைகள் கம்பனிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் உள்ளடக்கப்பட்டுள்ளன.ஆனால் தோட்ட நிர்வாகங்கள் அதனையும் கைச்சாத்திட மறுத்துள்ளதோடு தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் வேதனத்தினை குறைத்து அடிப்படை உரிமைகளான சுகாதார வசதிகள் குறைத்துள்ளதோடு தோட்டத்தில் ஒரு மாதம் வேலை செய்யாவிட்டாலும் கூட அவர்களை வேலையிலிருந்து நீக்குகிறது.
சம்பளத்தினையும் குறைத்து மதிப்பிடுகிறார்கள், முறைசார முறையிலே சகல வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையிலேயே செய்து வருகிறார்கள் இதனால் இவர்களின் சேவைகால நிதி சேமலாப நிதியம். வீட்டு வசதி மலசல கூட வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதாக தெரிவில்லை.இரண்டு மூன்று ஆண்டுகள் தோட்டத்தில் வேலை செய்தால் கூட அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களாக பேர் பதிவதில்லை. புதிய தொழிலாளர்களை சேர்த்து கொள்வதுமில்லை.
இதனால் தொன்று தொற்று இந்த நாட்டுக்கு பாரிய அளவில் தேசிய வருமானத்திற்கு அந்நியச்செலவாணியினை தேடி தந்த தொழிலாளர்கள் தொழில்களை தேடி நாடோடிகளான அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் உபதலைவர் செல்லையா சிவசுந்தரம் தெரிவித்தார். ஹட்டன் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்க அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இன்று தொழிலாளர்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரங்களையும் நோக்கி வேலைக்காக செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.அதிகமான மாணவர்கள் பாடசாலையினை விட்டு விலகி வேலைக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளன.பெண்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கருதி குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே இதனை இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் கண்டிப்பதுடன் அரசாங்கம் மற்றும் தொழில் அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும். என கேட்டுக்கொள்வதோடு கம்பனிகளுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட அழுத்தம் கொடுக்க வேண்டும் என செங்கொடி சங்கம் கேட்டுக்கொள்கிறது. இதே நேரம் நாங்கள் இந்த பிரச்சினையினை தீர்ப்பதற்காக பல தொழிற்சங்கங்களுடன் பேசினாலும் கூட அவர்கள் பெரும் பாலும் அரசியல் கட்சிகளை சார்;ந்தவர்களாக இருப்பதனால் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. எனவே தான் நாங்கள் இந்த பிரச்சினையினை தீர்ப்பதற்கு சகல வழிகளிலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதுடன் சட்டரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்



