பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் கொள்வனவு நடவடிக்கைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் நகரப் பகுதிகளுக்கு வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புலனாய்வு அதிகாரிகளின் பங்களிப்புடன் கூடிய விசேட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சனநெரிசல் மிக்க வர்த்தகப் பகுதிகளில் நடமாடும் போது, தமது பணம் மற்றும் தனிப்பட்ட உடைமைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.




