பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு – உடன்படிக்கையின் உள்ளடக்கம் இன்னும் வௌிவரவில்லை!

0
10

” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.இது கட்சி அரசியல் மற்றும் முதலாளித்துவ இலாப நோக்கம் கொண்ட ஒப்பந்தமாகும்..”

இவ்வாறு மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

பெருந்தோட்ட நிறுவனங்கள் இவ் ஒப்பந்தந்திற்கான நன்றியையும் மகிழ்ச்சியையும் ஜனாதிபதியின் (11.02.2026) மலையக விஜயத்தின்போது வெளிக்காட்டிவிட்டன.

அரசாங்கத்தின் நன்றி கடன் இதைவிட அமோகமாக இருக்கும். இது தொடர்பில் மலையக முற்போக்கு சக்திகள் மிகுந்த அவதானத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் செயற்படல் வேண்டும்.

ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களை சந்தித்ததை தற்செயல் நிகழ்வல்ல அது நன்கு திட்டமிட்ட நிகழ்வு என்பதை அன்றைய காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதியை தோட்ட அதிகாரிகள் காத்திருந்து வரவேற்றதும் தொழிலாளர்களின் ஆடை அலங்காரம் என்பவற்றோடு ஜனாதிபதிக்கு போர்தப்பட்ட பொன்னாடையும் இதனை வெளிப்படுத்தியிருந்தன.

தொழிலாளர்கள் தமக்கான சம்பளம் அதிகரித்த விடயத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி ஜனாதிபதி இருநூறு ஆண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்தி மகிழ்ந்ததோடு; மண்ணில் கால் பதித்தமைக்கு நன்றியும் கூறினர். இறுதியில் நாங்கள் உங்களோடு இருக்கின்றோம் எனக் கூறியதோடு, மகிழ்ச்சியின் உச்சத்தின் உணர்வில் “நீங்களே கடவுள்” என்றும் கூறினர்.

தொழிலாளர்களுக்கு அதிகரித்து கொடுக்கப்பட்ட ரூபாய் 400 என்பது அரசாங்கமும் பெருந்தோட்ட நிறுவனங்களும் தங்கள் குடும்ப சொத்தில் இருந்து கொடுக்கவில்லை. தொழிலாளர்களின் இரத்த வியர்வை சிந்திய இலாபத்தில் கிள்ளி எடுத்து கொடுக்கும் தொழிலாளர்களின் பணமாகும்.

அதே பணத்தில் தோட்ட முகாமையாளர்களும், அதிகாரிகளும் பெறும் சம்பளத்தோடும் அனுபவிக்கும் சுகபோக வாழ்வோடும் ஒப்பிடுகையில் சிறு தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல இன்னும் மூன்று வருடங்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்த சக்தியாலும் வாய் திறக்க முடியாத அளவிலேயே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

அதிலும் வருகைக்காண ஊக்குவிப்பு பெடுப்பனவு மலையகத்தவர்களின் அரசாங்கத்திற்கான ஒத்துழைப்பிலேயே தாங்கியுள்ளது. அரசாங்கம் தமது அரசியல் இலாப நட்ட கணக்கிலேயே அதனை நோக்கும்.

இந்த நிச்சியமற்ற ஊக்குவிப்பு பணத்தினை தேசிய மக்கள் சக்தி மலையக வாக்கு வங்கியில் நிலையான வைப்பாக்கி உள்ளதென்பதை ஜனாதிபதியின் மலையக விஜய நிகழ்வுகள் காட்டுகின்றன. மலைய மண்ணில் பிறந்தவரும், மக்கள் விடுதலை முன்னணியின் நீண்ட கால உறுப்பினரும், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியை பலப்படுத்த எடுக்கும் முயற்சிக்கும் மத்தியில்; ஜனாதிபதி மலையகத்தில் தமது வாக்கு வங்கியை தற்போதைக்கு பலப்படுத்தியுள்ளார் என்றே கூறலாம்.

தொழிலாளர் சமூகம் ஜனாதிபதிக்கு தமது மகிழ்ச்சியை தெரிவிக்கவும் வாழ்த்தவுமே தமது வாய்களை திறந்தனர். மகிழ்ச்சி களிப்பில் ஒளிப்படங்களை எடுத்ததையும் காணக் கூடியதாய் இருந்தது. பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடி தொடர்பாகவோ தமது அடிப்படை வாழ்வாதார பிரச்சினை தொடர்பாகவோ எவரும் கதைக்கவில்லை. காணி உரிமை விடயமாக எவரும் எதையும் கேட்கவில்லை. இது தொடர்பில் கதைக்கக் கூடாது. மனு கொடுக்கவும் கூடாது எனும் அழுத்தம் இருந்ததா? அது தொழிலாளர்களுக்ககே வெளிச்சம்.

நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு இவ்வாறு ஜனாதிபதி செல்லும் போது ஒரு பக்கம் உத்தியோகபூர்வ வரவேற்பு நடந்தாலும்; மறுபக்கம் நீதி கோரி மனுக்கள் கொடுப்பதும், வீதி மறியல் போராட்டம் நிகழ்வதும் உண்டு. ஆனால் ஜனாதிபதி மலையக பாதைகளில் செல்லும்போதும் மலையக மண்ணின் மக்களோடு நின்ற போதும் எங்கும் நீதி போராட்டம் நடத்துவதுமில்லை. கோரிக்கை பதாதைகள் தூக்கவும் இல்லை. கோசம் எழுப்பவும் இல்லை. தேயிலை கொழுந்து பறிக்கும் போதும் கவ்வாத்து வெட்டும் போதும் செடிகள் அமைதியாக இருப்பது போல மலையக மக்களும் அமைதியாக நின்றனர்.

மலையகத்தின் தொழிற்சங்களினதும் அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் மலையக மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள், தேவைகள், உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளை, குறிப்பாக இந்திய தூதுவரை, தமிழக முதலமைச்சரை ஏன் ஐ.நா பிரதிநிதிகளை சந்திக்க முயற்சிப்பதை நாம் அறிவோம்.

ஆனால் மலையகத்திற்கு வந்த ஜனாதிபதியை இவர்கள் சந்தித்ததாக தெரியவில்லை. தமது தொண்டர்களை மனுக்களை கொடுப்பதற்கு உற்சாகப்படுத்தவுமில்லை. இது ஏன்? அரசாங்கத்திற்கு மலையக அரசியல் தலைமைகளுக்கும் இடையில் அரசியல் புரிந்துணர்வு ‘டீல்’ எதுவும் உள்ளதா? இதுவே மக்கள் கேள்வி.

ஜனாதிபதியின் மலையக விஜயத்தின் போது உற்சாக எழுச்சியைத் தவிர அரசியல் எழுச்சியை காண முடியவில்லை. இதற்கு தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளின் தலைமைகளுமே பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்கு அரசியல் விழிப்பு ஏற்படுத்தாது அவர்களை அரசியல் மயப்படுத்தாது அரசியல் அமைப்புபடுத்தாது கட்சி அரசியலுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி தமது சுயநல அரசியலை முன்னெடுப்பது இதற்கு காரணம் ஆகும். இந்நிலை நீடிக்க கூடாது.

மலையக  முற்போக்கு சக்திகள் விழிப்படைந்து மக்களை அரசியல் மயப்படுத்தி கட்சி அரசியலுக்கு அப்பால் செயல்படுவதற்கு வழி வகுக்காது விடின் மலையகம்  சுற்றுலாத்தலமாகவும், அரசாங்கத்துக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் தொழிலாளர் வாழும் நிலப் பிரதேசமாக மட்டுமே இருக்கும். ‘மலையகம்’ மலையகத்தவர்களின் தாயகம். அது எம் தேசிய அடையாளங்களின் இருப்பிடம். இனமாக திரட்சி கொள்வோம்.” – என்றுள்ளது.

kuruvi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here