போக்குவரத்து மறுமலர்ச்சிக்கு விரைவான திட்டம்!

0
6

நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை மிகவும் வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான போக்குவரத்துச் சேவையாக மாற்றி, பொதுமக்களுக்குக் கௌரவமான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்காக முழுப் போக்குவரத்து கட்டமைப்பிலும் விரைவான மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பொருளாதாரப் போட்டித்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம், சமூக சமத்துவம் மற்றும் பிரவேசம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 05 தூண்களின் கீழ் போக்குவரத்து அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ள மூலோபாயத் திட்டம் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

கொழும்பு நகரில் தற்போது நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக ‘Lanka Metro Transit’ பஸ் சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான பஸ்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

கொழும்பைச் சுற்றியுள்ள 6 பிரதான வீதிகள் ஊடாக இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகச் செயற்படுத்தப்படவுள்ளதோடு, மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் பின்னர் காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும், அடுத்த 03 ஆண்டுகளுக்குள் 08 பிரதான நகரங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் கொழும்பு நகருக்கு நாளாந்தம் பிரவேசிக்கும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பயணிகளைப் பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்க்க எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்களுக்கான முன்னுரிமைப் பாதைகளை அடையாளம் காண்பதும், அவற்றின் வினைத்திறனைப் பேணுவதும் அவசியமானது என ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

பொதுமக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதற்காக, தற்போது ஒழுங்கீனமாகக் காணப்படும் பஸ் சேவைகளுக்குப் பதிலாக பஸ் நிறுவனங்கள் (கிளஸ்டர்- Clusters) முறையை நோக்கி நகர வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ”சிறந்த போக்குவரத்துச் சேவை கிடைப்பதே மக்களின் தேவையெனவும் அது எந்த வகையில் கிடைக்கிறது என்பது அவர்களுக்கு முக்கியமல்ல ” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நமது நகரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அல்ல. காலப்போக்கில் தாமாகவே உருவானவை என்பதால், தற்போதுள்ள நகரக் கட்டமைப்பிற்குள் போக்குவரத்து முகாமைத்துவத்தை மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ‘பஸ் நிறுவனங்கள்’ (Cluster System) முறையை நிறுவுவதே இப்பிரச்சினைக்குச் சிறந்த தீர்வாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த முறையின் கீழ், பஸ் உரிமையாளர்களின் பஸ்களை ஈடுபடுத்துவதற்காக ஒரு நிறுவனம் உருவாக்கப்படும் என்றும், அதில் லாபம் தொடர்பான பிரச்சினை எழுந்தால் அந்த நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் ஊடாகச் சலுகைகளை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதன்போது பஸ் உரிமையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு ஒப்பந்தமும், அதேபோன்று சேவையைத் தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பாக அரசாங்கத்திற்கும் பஸ் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். புதிய பஸ்களை இறக்குமதி செய்து பெருமளவு நிதியை செலவு செய்வதை விட இது எளிதான காரியமாக அமையும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்வகைப் போக்குவரத்து மையங்களை (Multi-modal Transport Hubs) திட்டமிடும்போது, ​​புகையிரத சேவைகளை மையப்படுத்தி ஏனைய போக்குவரத்து சேவைகளை அவற்றுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். களனி வெளி புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்புக்கு மின்னணு பொறிமுறையை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்புரி திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி விசேஷட கவனம் செலுத்தினார். தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் வகையிலும் அவர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பணி நிபந்தனைகள் சீர்செய்யப்பட வேண்டும் என்றும், குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான நியமனக் கடிதங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், முறையான நலன்புரி சேவைகளை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதே இடத்தில் தண்டப்பணம் அறவிடல் (On-site Fine System) மற்றும் தகுதி இழப்பு புள்ளிகள் திட்டம் (Demerit Point System) தொடர்பான தற்போதைய நிலைமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 10 ஆண்டுகளாக சாரதி அனுமதிப்பத்திரம் சிப் (Chip) ஒன்றுடன் வழங்கப்பட்டாலும், அத்தகைய தகுதி இழப்பு புள்ளிகள் முறையை செயல்படுத்த எந்த தொழில்நுட்ப மென்பொருள் கட்டமைப்பும் உருவாக்கப்படவில்லை என்றும், அது வெறும் ஏமாற்று வேலை என்பது நிரூபனமாகியுள்ளது. Gov.pay மூலம் தற்போது அந்த செயல்முறை சீர்செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 6-7 மாதங்களுக்குள் ஒரு முறையான செயல்முறையை நிறுவ முடியும் என்றும் இதன் போது குறிப்பிடப்பட்டது.

முச்சக்கர வண்டிகள், டேக்சிகள் மற்றும் பாடசாலை வேன்களை கண்காணிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் அதனை முன்வைக்க எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிசு சரிய பேருந்து சேவை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் சிசு சரிய திட்டத்திற்காக அரசாங்கம் 2200 மில்லியன் ரூபா ஒதுக்கியதாகவும், அதில் 500 மில்லியன் ரூபா பயன்படுத்தப்படாவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ‘சிசு சரிய’ திட்டத்தை மேலும் திறம்படச் செய்வது மற்றும் மாணவர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் அதை விரிவுபடுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்நாட்டின் போக்குவரத்துத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒரே தளத்திற்குக் கொண்டுவரும் வகையில், தேசிய போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை நிறுவுவது (Centre for Transport Research and Development) குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை புகையிரதத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here