மட்டக்களப்பில் கொள்ளைகளுக்காக மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி, கொலை செய்யும் குழு தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன
பெண்களின் தங்க தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர், அவர்களை கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த குழுவுடன்; தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதுடைய அவர் முச்சக்கர வண்டி சாரதியாவார்.
அத்துடன் மயக்கத்துக்கு பாவிக்கும் தெளி கருவியுடன் மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
அவர் வழங்கிய தகவலின்படி, அவரின் இரண்டரை வயது மகள் வயல் பகுதியில் தனித்துவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
அத்துடன், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர், குறித்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவின் வழிகாட்டலில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது வவுணதீவு காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பி; மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்த ஊறணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரண்டு நகையக உரிமையாளர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் கொள்ளைக் குழுவிடம் இருந்து, இரண்டு முச்சக்கர வண்டிகளும் கார் ஒன்றும், கோடரி உட்பட்ட கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
அதேநேரம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளன.




