இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமாகிய ஜீவன் குமாரவேல் விடுத்த அழைப்பை பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் தோட்ட முகாமையாளர்கள் நிராகரித்துள்ளதாக தெரிய வருகிறது.
நுவரெலியா நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நாளைய தினம் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் தோட்ட முகாமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரணவும் இதில் கலந்து கொள்வதாக கூறியே இந்த அழைப்பு ஜீவன் குமாரவேல் தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஏற்பாட்டுள்ள முரண்பாட்டு நிலையை கருத்திற்கு கொண்டு இந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பெருந்தோட்ட கம்பனிகளின் யூனியன் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் தோட்ட முகாமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
பெயர் கூற விரும்பாத இரண்டு பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள், குறித்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அதில் பங்கேற்பதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாகக் கூறினர்.
கம்பனிகள் குறித்த ஜீவன் குமாரவேலின் செயற்பாடுகளும் இந்த அழைப்பு நிராகரிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. இது விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் குமாரவேல் தரப்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.