மாகாணத் தேர்தல் தாமதம்; ஆணையத்தை சாடாதீர் – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்

0
6

“தேர்தல் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்று ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு முன்வைக்கக் கூடாது. மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாமல் போனமைக்கு தேர்தல் ஆணைக்குழுவால் எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது” என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு முன் வைக்காமல், தாம் தம்மை நோக்கியே கைநீட்டிக் கொள்ள வேண்டும். இன்று மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அதிக அக்கறையுடன் பேசும் தரப்பினரிடம், இதே அக்கறை அந்தக் காலப்பகு தியில் இருந்திருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தால், இந்நேரம் ஒருசில மாகாண சபைகளில் இன்னுமொரு தேர்தலும் வந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எது எவ்வாறாக இருந்தாலும், தற்போதுள்ள நிலைமையில் கலப்புத் தேர்தல் முறைமையிலோ அல்லது விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை யிலோ அல்லது வேறு ஏதாவதொரு முறையிலோ மாகாணத் தேர்தலை நடத்துவதற்கான சட்டம் நாட்டில் இல்லை. குறிப்பாக மாகாண சபைத் தேர்தலில் மாத்திரமே இந்த நிலைமை ஏற்பட் டுள்ளது என்றும் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பில் விளக்கமளித்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘தேர்தலொன்றை நடத்த முதல் சட்டமொன்று இருக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழு என்பது சட்டத்தை அமுல்படுத்தும் நிறைவேற்று பணிகளை முன்னெடுக்கும் நிறுவனமாகும். நிறைவேற்று கடமையை செய்வதற்கு உறுதியான சட்டமொன்று இருக்க வேண்டும்.

2017 ஆம் ஆண்டு, 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டம் புதிதாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தினூடாக, அதுவரை நடைமுறையிலிருந்த விகிதாசார தேர்தல் முறைமைக்கு பதிலாக கலப்புத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய தேர்தல் முறைமைக்கமைய எல்லை நிர்ணய சிக்கலொன்று இருந்தது. அதாவது, அது தேர்தல் தொகுதிகளை பிரிப்பது தொடர்பான விவகாரமாகும்.

ஆணைக்குழு என்ற அடிப்படையில், எல்லை நிர்ணய பணிகளை குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு ஒப்படைத்தேன். அதனை பாராளுமன்றத்தில் ஒப்படைத்து, பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்றுவதற்கான பணிகள் பல மாத காலமாக இழுத்தடிக்கப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்றத்தில் அப்போதிருந்த 225 பேரும் அதற்கெதிராக வாக்களித்து இந்த எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டது.

“பிரதமர் தலைமையில் குழுவொன்றை நியமித்து, அந்தக் குழுவில் எடுக்கும் தீர்மானத்தை அறிவித்ததும் ஜனாதிபதி அந்தத் தீர்மானத்தை வர்த்தமானியில் வெளியிட முடியும்’’ என்பது அந்தச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதியில் நாட்டை ஆட்சி செய்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விடய பொறுப்பு அமைச்சர், சபாநாயகர், சபை முதல்வர்கள் உள்ளிட்ட தரப்பினர், பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு என்பவற்றினாலேயே இது இல்லாமல் போயுள்ளது.

அதனால், தேர்தல் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என்று ஆணைக் குழு மீது குற்றச்சாட்டு முன்வைக்கக் கூடாது. தாம் தம்மை நோக்கியே கைநீட்டிக் கொள்ள வேண்டும். இன்று மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அதிக அக்கறையுடன் பேசும் தரப்பினரிடம், இதே அக்கறை அந்தக் காலப்பகுதியில் இருந்திருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்திருந்தால், இந்நேரம் ஒருசில மாகாண சபைகளில் இன்னுமொரு தேர்தலும் வந்திருக்கும். மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாமல் போனமைக்கு தேர்தல் ஆணைக்குழுவால் எந்த பொறுப்பையும் ஏற்க முடியாது. தேர்தலை திருடர்கள் எடுத்துச் சென்றார்களா அல்லது அவர்களின் தலையில் வைப்பதற்கு இடமளித்தார்களா? போன்ற காரணங்களை அப்போதிருந்த தரப்பினர் சகல பொறுப்பையும் ஏற்க வேண்டும். தற்போதுள்ள தேர்தல் ஆணைக்குழு அதனை பொறுப்பேற்கவும் முடியாது.

எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற் கான சட்டத்தை தயார் செய்து தருமாறே நாங்கள் தொடர்ச்சியாகக்கோரி வருகிறோம். இன்றல்ல, அன்றிலிருந்து இதனைக் கோரி வருகிறோம். காலத்துக்கு காலம் எங்களின் தீர்மானங்கள் மாறுவதில்லை. எப்போதும் தேர்தல் ஆணைக்குழு, தேர்தலுக்கான முன்னிருந்து செயலாற்றும். தொடர்ந்தும் இந்த விடயங்களை கூறி வருகிறோம்.

தற்போதுள்ள நிலைமையில் கலப்புத் தேர்தல் முறைமையிலோ அல்லது விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையிலோ அல்லது வேறு ஏதாவதொரு முறையிலோ மாகாணத் தேர்தலை நடத்துவதற்கான சட்டம் நாட்டில் இல்லை. குறிப்பாக மாகாண சபைத் தேர்தலில் மாத்திரமே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சட்டங்கள் இருப்பதாலேயே ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் என்பவற்றை குறுகிய காலத்தில் நடத்தி நிறைவு செய்திருக்கிறோம். பொறுப்பை ஏற்ற தரப்பினர் அவர்களுக்குரிய காலத்தில் அவர்களின் கடமையை நிறைவேற்றா மல் தேர்தல் ஆணைக்குழுவுக்கெதிராக குற்றச்சாட்டு முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம்.

புதிய சட்டமொன்று கொண்டுவரப்படுமாக இருந்தால் தேர்தல் நடத்தும் கால எல்லை, அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும். ஏதாவது புதிய சட்டம் கொண்டுவருகிறார் கள் என்றால் அதில் எந்த தேர்தல் முறைமையை குறிப்பிடப்போகிறார்களோ அதனடிப்படையி லேயே மிகுதி செயற்பாடுகள் தீர்மானிக்கப்படும். அதற்கமையவே தேர்தல் நடத்தும் காலப் பகுதியை தீர்மானிக்க முடியும். அதற்கு முதல் எதனையும் கூற முடியாது.

2017, 17ஆம் இலக்க சட்டத்துக்கமைய எங்களால் தயார் செய்யப்பட்ட எல்லை நிர்ணயத் துக்கமைய தேர்தலை நடத்துவது என்றாலும் அது பொருத்தமானதாக இருக்கும். ஆனால், ஏதாவது முறைமையில் விரைவில் தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் கடப்பாடு. அது விகிதாசாரத் தேர்தல் முறைமையாக இருந்தாலும் சிக்கல் இல்லை. கலப்புத் தேர்தல் முறைமையாக இருந்தாலும் சிக்கல் இல்லை. சட்டம் தயாராகும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்திலுள்ள விதத்தில் தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here