வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஏழு மாதங்களில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், வேலை தேடுபவர்களை ஏமாற்றியதாக சந்தேக நபர்களிடமிருந்து 199.4 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு சோதனைகளை மேற்கொண்டது.
இதன்போது உரிமம் பெற்ற நிறுவனங்களில் இருந்து ஏழு பேர் உட்பட மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
2024 ஆம் ஆண்டில் மட்டும், வேலைவாய்ப்பு தொடர்பான மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 18.25 மில்லியன் ரூபா பணத்தை பணியகம் மீட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மொத்தம் 4,658 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளை கையாளும் போது, குறிப்பாக மோசடி வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
1989 என்ற ஹொட்லைன் இலக்கத்தை தொடர்பு கொண்டு வேலை வாய்ப்புகளைச் சரிபார்க்குமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.