அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக் காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து நேற்று குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன.
இந்த ஏவுகணைகள் கடலில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வுடன் நேரில் வந்து பார்வையிட்டார். ஒரு கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, திரையில் ஏவுகணைகள் பாய்வ தையும் அவை இலக்குகளைத் தாக்குவதையும் தனது மகளுக்கு அவர் விளக்கினார்.
அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனையை கிம் ஜாங் அன் நடத்தியதாக தெரிகிறது. ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலவும் போருக்கு இடையே, அமெரிக்காவை சீண்டும் வகையில், கிம் ஜாங் அன் நடத்திய ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.




