அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதில் ட்ரம்ப் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குடியேற்ற நீதிமன்றத்தின் 17 நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி உள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக குடியேற்ற அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளார்.
அவர்கள் பல்வேறு மாகாணங்களிலும் கடும் சோதனை நடத்தி, தொழிற்சாலைகளில் உரிய ஆவணம் இல்லாமல் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தி வருகின்றனர். மேலும் மெக்ஸிக்கோவை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் குடியேற்ற நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்படுவார்கள்.
இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் 10 மாகாணங்களில் குடியேற்ற நீதிமன்றங்களில் 17 நீதிபதிகளை ட்ரம்ப் அரசு பணிநீக்கம் செய்திருப்பதாக சர்வதேச தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் கூட்டமைப்பு எனும் தொழிற்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.