மலையக தோட்டப்பகுதியிலுள்ள ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த காலங்களில் 3000 உதவி ஆசிரியர் நியமனங்கள் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.குறித்த நியமனங்கள் அடிப்படை தகைமைகளை பூரத்தி செய்த பின்னர் நிரந்தரமாக்கப்படும் என நிபந்தினையின் அடிப்படையிலேயே குறித்த ஆசிரியர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். எனினும் அவர்களின் தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் இதுகுறித்து நிதியமைச்சரிடம் பேசி மத்திய மாகாணத்தில் உள்ள 306 பேருக்கு எதிர்வரும் 15ம் திகதி நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
இன்று மாலை 06.12.2021 அட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் உதவி ஆசிரியர்களாக நியமனம் பெற்ற சுமார் 1000 பேர் வரை ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் கடமையாற்றுகின்றனர். எனினும் இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மாத்திரம் ஏனைய மாகாணங்களில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள போதிலும் மத்திய மாகாணத்தில் தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்டு இருந்தும் அவர்கள் நிரந்தரமாக்கப்படவில்லை.
இதனை ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். இதனப்படையிலேயே குறித்த நியமனங்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒருசிலரின் கோவைகள் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் பயிற்சிகள் நிறைவு பெறாது பூர்த்தி செய்யப்படாததன் காரணமாக அவர்களுக்கான நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படாத போதிலும் அவர்களுக்கும் கோவைகள் முழுமையானபின் நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்



