அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை!

0
29

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றுபதிலை வழங்கியிருந்தார்.

பிரதமர் தெரிவித்ததாவது,

உள்நாட்டு பொறிமுறை மாத்திரமே அனுமதிக்கப்படும் சர்வதேச பொறிமுறைக்கு அனுமதியில்லை இதனால் நாடு பிளவுபடும் எனக் கூறி இருந்தார்.

இது தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய சாணக்கியன்,

பிரதமர் அளித்த பதிலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், பிரதமரே, உங்களின் ஆட்சிக் காலத்தின் சுமார் 20% ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அதாவது, ஒரு வருடம் கடந்துவிட்டது. இப்போது, ஒரு வருடம் கடந்த நிலையில், நீங்கள் இந்த சபைக்கு கூறுவது என்னவெனில் அரசு உள்நாட்டு முறைமையைக் கொண்டு செல்ல விரும்புகிறது, சர்வதேச தலையீடுகளுக்கு அனுமதியில்லை என்கிறீர்கள், ஏனெனில் அது சமூகங்களைப் பிளக்கும் என்றும் நாட்டில் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் கூறுகிறீர்கள்.

அந்த கருத்துடன் நான் ஒப்புக்கொள்வதில்லை. உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் நம்பும், நம்பிக்கையுடன் ஈடுபடும் ஒரு செயல்முறை இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை நிராகரித்துள்ளீர்கள், மறுத்துள்ளீர்கள்.

இதன் பொருள், பாதிக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக, எனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறேன். இந்த அரசு குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலைக் கேட்டு சர்வதேச விசாரணைக்கு ஒப்புக் கொள்வார்கள் என நாங்கள் நம்பியிருந்தோம்.

எனினும், எனது நிலைப்பாடு தெளிவாகவே இருக்கிறது, நாங்கள் உங்கள் உள்நாட்டு முறைமையை நிராகரிக்கிறோம், மேலும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக நாங்கள் சர்வதேச விசாரணையையே கோருகிறோம், ஏனெனில் இலங்கையின் அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை. இது போர் முடிந்த 16 ஆண்டுகளாக எங்களின் நிலைப்பாடாகவே உள்ளது.

இப்போது, நீங்கள் குறிப்பிட்ட உள்நாட்டு முறைமைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன், பிரதமரே, உள்நாட்டு முறைமை நீதியாக சமமாக செயல்படும் என்று நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள் , எப்போது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் (Office of Missing Persons) இயங்குவதற்குத் தேவையான பணியாளர் எண்ணிக்கை 250-ஐ கடந்து இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குப் பிறகும், தற்போது 29 பேரே உள்ளனர்? இதுதான் உள்நாட்டு பொறிமுறையா?

நீதி அமைச்சரே, தயவுசெய்து நான் இவ் எண்ணிக்கையை பிழையாக கூறுகிறேன் என்று சொல்ல வேண்டாம், நீங்கள் உங்கள் அமைச்சகத்தில் சிறிது நேரம் செலவழித்து இந்த எண்ணிக்கைகள் மற்றும் தரவுகளைப் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது, காணாமல் போனவர்களின் அலுவலகத்தில் 59 இடங்களில் 13 பேர் மட்டுமே உள்ளனர். ஒதுக்கப்பட்ட 129 மில்லியனில், ஜூன் 30 ஆம் திகதியளவில் 36 மில்லியன் ரூபாயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரே, எமக்கான நீதி நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு விடயம். நீங்கள் கூறும் இந்த உள்நாட்டு முயற்சிகள் எந்தளவு பயனளிக்கும்?

இலங்கை இழப்பீடு அலுவலகம் (Office of Reparations) பற்றியும் கவலை இருக்கிறது. 2009 இல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாக ரூ.200,000 வழங்க ஒப்பந்தம் இருந்தது. ஆனால் 253 குடும்பங்களுக்கு மட்டுமே சுமார் ரூ.60 மில்லியன் வழங்கப்பட்டது.

2022 இல் அமைச்சர் அலி சப்ரி ரூ.100,000 வழங்க முன்வந்தார், அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் ரூ.200,000 ஆக உயர்த்தினார்கள், அதுவும் நிராகரிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் ரூ.1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டதில் ரூ.800 மில்லியன் மட்டுமே செலவழிக்கப்பட்டது.

2025 பட்ஜெட்டில் மீண்டும் ரூ.1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை ஒரு காசும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பெரும்பாலும் 2,000 இற்கும் முன்னரே காணாமல் போனவர்களின் தாய்மார்கள். மொத்தம் 16,000 பேரில் சுமார் 7,000–8,000 பேர் அதற்கு முன்னரே பதிவு செய்யப்பட்டவர்கள்.

இப்போது, இலங்கை இழப்பீடு அலுவலகத்தில் நியமிக்கப்படவிருக்கும் இரண்டு உறுப்பினர்களும் இராணுவ பின்னணியுடையவர்கள் இதனால் பாதிக்கப்பட்ட எமது மக்களை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஐந்து உறுப்பினர்களில் மூவர் தமிழர்கள் எதிர்க்கிறார்கள். இந்நிலையில், நஷ்டஈடு அலுவலகம் எவ்வாறு நம்பகமாக செயல்படும் என்று நீங்கள் எப்படி கூற முடியும்?

மேலும், அன்றாட பிரச்சினைகள், உதாரணத்திற்கு மட்டக்களப்பு மருத்துவக் கல்லூரி பதாதை சிங்களத்தில் மட்டுமே உள்ளது, தமிழில் இல்லை. இவற்றையும் நான் எழுத்து மூலமாக தெரிவிப்பேன். எனது நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதே ஆகும் என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here