இதன்மூலம், T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றின் குழு 2இல் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக தமது மூன்றாவது வெற்றியையும் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.
T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (29) இரவு டுபாயில் நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப வீரர்களான ஹஸ்ரதுல்லாஹ் ஷஸாய் (0), மொஹமட் ஷசாத் (8) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்து வந்த ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், அஸ்கர் ஆப்கான், கரீம் ஜனத் ஆகியோர் அதிரடியாக விளையாட முயற்சித்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த அணித்தலைவர் மொஹமட் நபி, குலாப்தீன் நைப் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் அதிகபட்சமாக அணித்தலைவர் மொஹமட் நபி மற்றும் குலாப்தீன் நைப் ஆகிய இருவரும் தலா 35 ஓட்டங்களையும், நஜிபுல்லாஹ் சத்ரான 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இமாத் வசிம் 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார்.
இதையடுத்து 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கறமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர்களாக மொஹமட் ரிஸ்வான், பாபர் அசாம் ஆகிய இருவரும் களமிறங்கினர். இதில் மொஹமட் ரிஸ்வான் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் பாபர் அசாமுடன் இணைந்து நிதானமாக ஆடிய பக்கர் ஸமானும் 30 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அனுபவ வீரரான மொஹமட் ஹபீஸ் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனையடுத்து அரைச்சதம் அடித்த கையோடு அணித்தலைவர் பாபர் அசாமும் விக்கெட்டை பறிகொடுக்கார்.
தொடர்ந்து 18ஆவது ஓவரை வீசிய நவீன் உல் ஹக் வெறும் 2 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அனுபவ வீரரான சொஹைப் மலிக்கின் விக்கெட் கைப்பற்றினார்.
இதனையடுத்து கடைசி 2 ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 24 ஓட்டங்கள் தேவைப்பட, கரீம் ஜனத் வீசிய 19ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசி அந்த ஓவரிலேயே ஆசிப் அலி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதன்மூலம் 19 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றியிலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
அரையிறுதி பயணத்துக்கான முக்கிய மோதலில் தென்னாபிரிக்காவை சந்திக்கும் இலங்கை
பாகிஸ்தான் அணிக்காக கடைசி நேரத்திரல் துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்து வெறும் 7 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்ற ஆசிப் அலி, போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, குழு 2இல் ஹெட்ரிக் வெற்றியோடு 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.



