அப்புத்தளை நகரில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் மாபெரும் புரட்சி போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும் அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடர்பாகவும் இந்த போராட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பெருந்தோட்ட கம்பெனிகளின் அடாவடி நிர்வாகத்திற்கு பதிலடி கொடுக்கும் நோக்குடனும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் உரத்தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, விவசாயிகளை பாதுகாக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்,
அனைத்து வளங்களும் நிறைந்த நம் இலங்கைத் திருநாடு இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றது. குழந்தைகள் குடிப்பதற்;கு பால் மா இல்லை அரிசி தட்டுப்பாடு உரத்தட்டுப்பாடு பெருந்தோட்ட மக்கள் தேயிலை கொழுந்தை உண்ண வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
மேலும் 1000 ரூபாய் சம்பளம் என்ற கபட நாடகத்தில் சிக்கித் தவிக்கின்ற பெருந்தோட்ட மலையக மக்களை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கின்ற பெருந் தோட்ட நிர்வாகங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.
மலையக மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக்கொள்ள இன்று வீதிக்கு இறங்கி இருக்கின்றோம் இது முடிவல்ல ஆரம்பம் என்றார்.