இந்தியாவில் கால்வாயில் பஸ் விழுந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு !

0
73

இந்தியாவின் பஞ்சாபிலுள்ள பதிண்டா நகர் அருகே பஸ் ஒன்று கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.

பஞ்சாபின் சர்துல்கர் என்ற இடத்தில் இருந்து பதிண்டா மாநகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, ஜிவான் சிங் வாலா என்ற கிராமத்தில் பாலத்தின் மீது மோதி பின்னர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது, சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்ததுடன் படுகாயம் அடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 18 பேர் பதிண்டா நகரில் உள்ள ஷாஹீத் பாய் மணி சிங் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சர்துல்கரில் இருந்து பதிண்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் இதையடுத்து, மாநகர துணை ஆணையர் தலைமையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ததாகவும் உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையும் வரவழைக்கப்பட்டதாகவும் பதிண்டா நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தையடுத்து, கிராம மக்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும், அவர்கள் உயிர்களைக் காப்பாற்றியதாகவும் பதிண்டா துணை ஆணையர் ஷோகத் அஹ்மத் பர்ரே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற போது மழை பெய்து கொண்டிருந்ததாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here