பொது போக்குவரத்து சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் “பொது போக்குவரத்து உரிமம்” பெற வேண்டும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (20) அம்பாறையில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பொது போக்குவரத்து சாரதிகளும் கட்டாயமாக இந்த உரிமத்தை பெற வேண்டும் என்பதோடு இந்த உரிமத்தை அறிமுகப்படுத்த ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த முடிவு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும்,சாரதிகள் பொறுப்பாகவும் முறையாகவும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் பயணிகள் போக்குரவத்து வாகனங்களை தகுதிவாய்ந்த நபர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சில பேருந்துகள் சீட் பெல்ட்கள் இன்றி தயாரிக்கப்பட்டாலும் அதற்குரிய மாற்றங்களைச் செய்ய முடியும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், சில சாரதிகள் பள்ளி பை பட்டைகளை போல சீட் பெல்ட்களை அணிந்து சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதாகவும் விமர்சித்தார், அத்தகைய நபர்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல தகுதியற்றவர்கள் என்றும் அவர் கூறினார்.




