நாடு திறக்கப்பட்டதையடுத்து இன்றிலிருந்து சகல அரச மற்றும் தனியார்துறை சேவைகள் வழமைபோல் இடம்பெறவுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென, அதன் தலைவர் வைத்தியர் சசீந்திர கமகே தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்கு முன்பு அதற்கான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக, www.ntmi.lk எனும் அதன் உத்தியோகபூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, www.ntmi.lk இணையத்தளம் அல்லது கையடக்கத் தொலைபேசி ஊடாக 225 எனும் இலக்கத்தின் ஊடாகவும், 1225 தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் அதற்கான பதிவுகளைமேற்கொள்ள முடியும்.
இதேவேளை ,ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் இன்று முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இருப்பினும் ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, உரிய பிரதேச செயலகத்தில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அல்லது இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் அவசர தேவையின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்புவோர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அல்லது காலி மாகாண அலுவலகத்திற்கு வரும் பொருட்டு வாரத்தின் அலுவலக நாட்களில் உரிய பிரதேச செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆட்பதிவு பிரிவின் மூலம் அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கம் மூலம் முற்பதிவு செய்து நாளொன்றை பெறுவது அவசியமாகும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர மூலமான பொது மக்களுக்கான சேவைகள் கடந்த முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டது.



