தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப இரத்தினபுரி மாவட்டம் றக்குவான தேர்தல் தொகுதியில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தொழிற்சங்க அரசியல் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை தொடர்பான சந்திப்பொன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் தலைமை பணிமனையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், பிரதி நிதிச் செயலாளர்
சோ.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றது. தொழிற்சங்க இயக்குனர் ஜோசப்,றக்குவானை தொழிற்சங்க அமைப்பாளர் பெரியசாமி கண்ணதாசன், றக்குவானை பிரதேச தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிற்சங்க மற்றும் அரசியல் இணைப்பாளர்களான
எஸ். குருநாதன், கே. தனசீலன், ஆர்.சித்ரகுமார், எஸ். மதியழகன்,
எம். சசிதரன்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை றக்குவானை எதலி தோட்டத்தின் டெல்வின் ஏ பிரிவை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 25 பேர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொள்வதற்கான அங்கத்துவ சந்தாவையும் தொழிற்சங்க அமைப்பாளர் பெரியசாமி கண்ணதாசன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரனிடம் ஒப்படைத்தனர்.



