இலங்கையில் தங்கத்தை மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கி தங்கத்தை இழக்க வேண்டாம் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் போலி இரத்தினக் கற்களைக் காட்டி மக்களை ஏமாற்றி அதற்குப் பதிலாக தங்கத்தை பரிமாறிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் மூவர் அடங்கிய குழுவின் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மெட்டியகொட – நிந்தன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலும் இருவருடன் இணைந்து போலி இரத்தினக் கற்களை வழங்கி அதற்கு பதிலாக பெறுமதியான தங்கப் பொருட்களை பெற்றுக்கொண்டதாக காலி மற்றும் களுத்துறையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
ஏனைய 2 சந்தேகநபர்கள் இருவரையும் தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.