இலங்கையில் வெள்ளை யானை ஜோடி – படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

0
9

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பானம பகுதியில் வெள்ளை யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த யானைகளைக் பார்வையிட ஏராளமானோர் அப்பகுதிக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர். குறித்த யானைகள் பார்ப்பதற்கு வெண்மையாக காட்சியளிப்பது குறித்து பலரும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

தனித்துவமான தோற்றம்

மேலும் பொதுவாக வெள்ளை யானைகள் மரபணு மாற்றத்தால் ஏற்படும் நிறமிக் குறைபாட்டினால் உருவாகும் அரிதான உயிரினங்கள். அவை புனிதமானவை யாகவும் அதிர்ஷ்டத்தின் அடையாளங்களாகவும் பல கலாச்சாரங்களில் மதிக்கப்படுகின்றன.

பானமவில் காணப்படும் இந்த யானைகளின் ‘வெண்மை’ குறித்து பிரதேசவாசிகள் ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை அளித்துள்ளனர். அப்பகுதியில் காணப்படும் சேறு மற்றும் மணல் இந்த யானைகளின் உடலில் ஒட்டியிருப்பதன் காரணமாகவே அவை வெள்ளையாகக் காட்சியளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் சேற்றில் குளித்து பின்னர் மணலில் புரளும்போது சேறும் மணலும் அவற்றின் தோலில் ஒட்டிக் கொண்டு அவற்றின் இயல்பான நிறத்தை மறைத்து வெண்மையான தோற்றத்தை அளிக்கின்றன. இது ஒரு தற்காலிகமான இயற்கையான நிகழ்வு என்பதைப் பிரதேசவாசிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

இதன் உண்மை நிலையைப் பொருட்படுத்தாமல் வெள்ளை யானை ஜோடியைக் காணும் ஆர்வம் சுற்றுலாப் பயணிகளிடையே அதிகரித்துள்ளது.

இயற்கையின் இந்த விசித்திரமான காட்சியை நேரடியாகக் காணும் அனுபவத்தைப் பெறுவதற்காக உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பலர் பானமப் பகுதிக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இயல்பாகவே யானைகள் அதிகம் காணப்படும் இலங்கையில் இதுபோன்ற ஒரு தனித்துவமான தோற்றம் கொண்ட யானைகள் இயற்கையின் ஆச்சரியமான அம்சங்களை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here