இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள 43 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய உதவுமாறு தமிழக மீனவர் சங்கம் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமானிடம் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரம்
குறித்த மீனவர்களின் விடுதலை தொடர்பில் அவர் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பிரகாரம் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் தற்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில், இவர்களை விடுதலை செய்ய உதவுமாறு தமிழக மீனவர் சங்கம் செந்தில் தொண்டமானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர் மீனவர்களை விடுவிப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த முறை 23 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த தருணத்தில் தமிழக மீனவர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அவர்களை விடுதலை செய்வதற்கான உதவிகளையும் செந்தில் தொண்டமான் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.