“இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்போவது எனக்கு முன்பே தெரியும்’’,“இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதைப்போல, இந்த மோதலையும் நிறுத்துவேன்’’ – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தீவிரத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த இஸ்ரேல், கடந்த வாரம் ஈரான் மீதும் கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறது. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்த, மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன!
ஈரான் – இஸ்ரேல் பகை!
ஒரு காலத்தில் நட்பு நாடுகளாக இருந்த ஈரானும் இஸ்ரேலும், 1979-க்குப் பிறகு எதிரிகளாக மாறின. மதச்சார்பின்மை கொள்கைகளைப் பின்பற்றி, ஈரானை ஆட்சி செய்த ஷா முகமது ரேஸா ஷா பஹ்லவிக்கு எதிராக, மத குருமார்கள் பலரும் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கினர். இதனால், 1979-ல் கவிழ்ந்தது பஹ்லவியின் ஆட்சி. பின்னர், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, நாட்டின் தலைவரான அயதுல்லா கொமேனி, ஈரானை இஸ்லாமிய நாடாக அறிவித்தார்.
இதையடுத்து, ஈரானின் பல கொள்கை முடிவுகளை மாற்றிய கொமேனி, `இஸ்லாமியர்களை வதைக்கும் இஸ்ரேலை எதிர்ப்பது’ என்ற முடிவையும் எடுத்தார். அன்றிலிருந்தே இரு நாடுகளுக்குமிடையே மோதல் போக்கு தொடங்கியது.
லெபனான், சிரியாவில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி, பாலஸ்தீனத்தின் காஸாவில் ஹமாஸ், ஈராக்கில் சில ஆயுதக்குழுக்கள் என இஸ்ரேல் எதிர்ப்பு அமைப்புகளைப் பல நாடுகளிலும் மறைமுக வளர்த்துவிட்டது ஈரான். இதனால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான பகை வளர்ந்துகொண்டே போனது.
இஸ்ரேல், ஈரானின் ஆதரவு அமைப்புகளைத் தாக்குவதும். ஈரான், தனது ஆதரவு அமைப்புகள் மூலம் இஸ்ரேலைத் தாக்குவதும் வாடிக்கையாக நடந்துகொண்டிருந்தன. ஆனால், கடந்த ஆண்டு வரை இரு நாடுகளும் நேரடியாக மோதிக்கொண்டதில்லை. கடந்த ஆண்டு ஏப்ரலில், சிரியாவிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி, சில அதிகாரிகளைக் கொன்றது இஸ்ரேல். அதற்கு பதிலடி தாக்குதல் கொடுப்பதற்காக, முதன்முறையாகத் தனது பிராந்தியத்திலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது ஈரான். பதிலுக்கு இஸ்ரேல் தாக்கினாலும், இந்த மோதலில் பேரிழப்புகள் எதுவும் இல்லை. ஆனால், `தற்போது தொடங்கியிருக்கும் மோதலில் இரு பக்கமும் சேதம் அதிகம்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
மோதலின் பின்னணி அணு ஆயுதமா?
நீண்டகாலமாகவே, `ஈரான், ரகசிய அணு ஆயுதத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறது’ என்ற குற்றச்சாட்டை இஸ்ரேலும் அமெரிக்காவும் வைத்துக்கொண்டிருக்கின்றன. `யுரேனியத்தைச் செறிவூட்டும் பணியைச் சமீபகாலமாக அதிகரித்திருக்கும் ஈரான், விரைவில் அணுகுண்டைத் தயாரித்துவிடும். அது எங்களுக்குப் பேராபத்து’ என்கிறது இஸ்ரேல். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தொடர்ந்து மறுக்கும் ஈரான், “ஆக்கபூர்வமான அணுஉலைத் திட்டத்துக்காகவே யுரேனியத்தைப் பயன்படுத்துகிறோம்’’ என்கிறது.
இந்த நிலையில், அணு ஆயுதத் தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகக் குற்றம்சாட்டி, ஈரான்மீது கடந்த ஜூன் 14-ம் தேதி அதிகாலையில் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை நடத்தியது இஸ்ரேல். அதிலும், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், தனது உளவாளிகள் மூலம் ஈரானிலிருந்தே டிரோன்களை இயக்கி, அந்த நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொன்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
மொசாட்டின் உளவாளிகள்!
இஸ்ரேல் – ஈரான் மோதலை உற்றுநோக்கும் சிலர், “இஸ்ரேலின் தாக்குதலில், ஈரான் புரட்சிகரக் காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமி உட்பட, பல முக்கியப் புள்ளிகள் கொல்லப்பட்டிருப்பதை ஈரானே உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆறு அணு விஞ்ஞானிகளும் இதில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களின் இருப்பிடங்களை நிச்சயம் ஈரானிலுள்ள மொசாட் உளவாளிகளே இஸ்ரேலுக்குச் சொல்லியிருக்க வேண்டும். சில இடங்களில் உளவாளிகளே மைக்ரோ டிரோன்களைப் பயன்படுத்திக் கொலைசெய்திருக்க வேண்டும்.
ஈரானிலுள்ள ஷியா – சன்னி இஸ்லாமியர்களின் பிரிவினை, பெண்களுக்கு எதிரான ஈரான் அரசின் கடும் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் அரசுமீது அதிருப்தியில் இருப்பவர்களை மொசாட் தன்வசப்படுத்தி, அவர்களைவைத்தே ஈரானுக்கு ஆட்டம் காட்டியிருக்கிறது. சமீபத்திய தாக்குதல்கள் மூலம் அங்கு ஈரான் அரசுக்கு எதிராகக் கலகம் மூட்டவும் இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது’’ என்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில், ஈரானைச் சேர்ந்த அணு ஆராய்ச்சியாளர்கள் பலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். `இதன் பின்னணியில் இருப்பது இஸ்ரேலின் மொசாட் அமைப்புதான்’ என்று ஈரான் குற்றம்சாட்டியபோதெல்லாம், அதை மறுத்திருக்கிறது இஸ்ரேல்.
`எனக்கு முன்பே தெரியும்!’
இஸ்ரேலின் ஜூன் 14-ம் தேதி தாக்குதலுக்கு, ஈரான் தரப்பிலிருந்து பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில், ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி பல இலக்குகளைத் தாக்கிவிட்டதாகத் தெரிகிறது. டெல்அவிவ் நகரிலுள்ள அமெரிக்கத் தூதரகக் கட்டடத்தின் மீதும் ஈரானின் ஏவுகணைகள் தாக்கியிருக்கின்றன.
ஈரான் தரப்பில் 220-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில், இஸ்ரேல் தரப்பில் தெளிவான தகவல்களை அந்த நாட்டு அரசு வெளியிடவில்லை. இதுவரை இல்லாத வகையில் இரு நாடுகளும் மோதிக்கொள்வதால், இந்தப் போர் நீண்டகாலம் செல்லும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
“இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்போவது எனக்கு முன்பே தெரியும்’’ எனத் தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதைப்போல, இந்த மோதலையும் நிறுத்துவேன்’’ என்றிருக்கிறார்.
மேலும், எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர்ப் பதற்றம் அதிகரித்திருப்பதால், கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென எகிறிக்கொண்டிருக்கிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் அபாயம் இருக்கிறது.
பிரதமர் மோடி தொடங்கி, பல உலகத் தலைவர்களும் `மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இரு நாடுகளும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை.
உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – ஹமாஸ் என இரண்டு போர்களால் உலக நாடுகள் ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், மூன்றாவது போரை நிச்சயம் இந்த உலகம் தாங்காது!