இஸ்ரேலில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக , இஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியேற்ற ஆணையம் , தற்போது அந் நாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் விசா காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
இதன்படி ஜூன் 12 ஆம் திகதிக்கு பிறகு காலாவதியாகும் B/1 விசாக்கள் மற்றும் பிற பிரிவுகள் உள்ளிட்ட பொது வேலைவாய்ப்பு விசா செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என்று SLBFE தெரிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கு மட்டுமன்றி , இதே போன்ற விசா வகைகளின் கீழ் இஸ்ரேலில் வசிக்கும் பிற வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, பெரும்பாலும் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளில் சுமார் 20,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம், நாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
தாக்குதல்களினால் நிலைமை மேலும் மோசமடைந்தால் தொழிலாளர்களை திருப்பி அனுப்ப இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேலை விட்டு வெளியேற விண்ணப்பித்தவர்கள், பிற நாடுகளுடனான போக்குவரத்து ஏற்பாடுகள் மூலம் திரும்பி செல்வதை எளிதாக்குவதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், புதிதாக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.