உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது பிரேசில்!

0
7

பரகுவாய் அணிக்கு எதிரான போட்டியில் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய பிரேசில் அணி அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

சாவோ போலோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தென் அமெரிக்க கால்பந்து கூட்டுச் சம்மேளன உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் 44ஆவது நிமிடத்தில் வின்சியஸ் ஜூனியர் போட்ட கோலின் மூலமே பிரேசில் அணி உலகக் கிண்ண தகுதியை உறுதி செய்தது.

இதன்படி உலகக் கிண்ண வரலாற்றில் அனைத்து தொடர்களுக்கும் தகுதி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை பிரேசில் தக்கவைத்துள்ளது. அதிகபட்சமாக ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்ற சாதனையும் பிரேசில் வசமே உள்ளது. தென் அமெரிக்க பிராந்தியத்தில் ஆறு அணிகள் நேரடி தகுதி பெறும் நிலையில் பிரேசிலுடன் நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனாவும் தமது இடத்தை உறுதி செய்துள்ளன. அதேபோன்று ஈக்வடோர் மற்றும் பெரு அணிகள் நேற்று முன்தினம் மோதிய போட்டி கோலின்றி சமநிலை பெற்றதால் ஈக்வடோர் அணியும் உலகக் கிண்ணத்தை உறுதி செய்தது.

இதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ அணிகள் தகுதிச் சுற்று இல்லாமலேயே தமது இடத்தை உறுதி செய்துள்ளன.

2026 பிஃபா உலகக் கிண்ணத்தில் வரலாற்றில் அதிகபட்சமாக மொத்தம் 48 அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here