ராவண எல்ல வனப்பகுதியில் ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்த சுற்றுலாப் பேருந்தின் சாரதியின் இரத்த மாதிரிகள் இன்று (7) மேலும் பரிசோதனைக்காக அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படும் என்று எல்ல காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (4) இரவு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில், 15 ஆம் கட்டை அருகில் இந்த விபத்து சம்பவித்தது. இதில் பயணித்த 15 பேர் உயிரிழந்திருந்ததோடு 18 பேர் காயமடைந்திருந்தனர்.
தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற குறித்த தனியார் சுற்றுலாப் பேருந்து, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு சொகுசு ஜீப்பில் மோதி, பின்னர் வீதியோர தடுப்புச் சுவரில் மோதி, பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதில் தங்காலை, ஹெனகடுவவைச் சேர்ந்த தோமர ஹன்னடிகே சிரத் திமந்த (25) என்ற பேருந்து சாரதியும் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து நடந்த நேரத்தில் சாரதி போதைப்பொருள் அல்லது வேறு ஏதேனும் நச்சுப் பொருளின் தாக்கத்தில் இருந்தாரா என்பதைத் தீர்மானிக்க, அவரது இரத்த மாதிரிகள் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று எல்ல காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.