ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவரும் டோக்கியோவில் இன்று 2,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டோக்கியோ சுகாதாரத் துறை தரப்பில், ”டெல்டா வைரஸ் காரணமாக ஜப்பானில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் மையமாக டோக்கியோ விளங்குகிறது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் டோக்கியோவில் 2,848 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட பிறகு டோக்கியோவில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச தொற்று இதுவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வாரம் முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா நான்காம் அலையின் பரவல் தீவிரமாக இருந்ததன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தளர்த்தியது. ஆனால், தற்போது தலைநகர் டோக்கியோவில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.