நுவரெலியா மாவட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேகமலை பகுதியில், காட்டுக்குள் சென்ற இருவரில் ஒருவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி, இரு இளைஞர்கள் காட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் 11 ஆம் திகதி மாலை வீடு திரும்பிய நிலையில், அவரது உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரும்பி வந்த இளைஞரிடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, அவர் வழங்கும் தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த இளைஞனை பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தொடர்ச்சியாக வனப்பகுதியில் தேடி வருகின்றனர். எவ்வாறாயினும் இதுவரை அவரை கண்டறிய முடியவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேகமலை தோட்டத் தொழிலாளர்கள் காணாமல்போன இளைஞனை தேடுவதில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.