காலி கிளடியேட்டர்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

0
206

குசல் மெண்டீஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு இடையிலான 121 ஓட்ட இணைப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் நுவான் துசாரவின் 5 விக்கெட்டுகள் காரணமாக ஜப்னா கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 64 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற காலி கிளடியேட்டர்ஸ் அணி நேரடியாக லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் பிளே-ஆஃப் சுற்றின் இரண்டாவது ஆட்டம் நேற்றிரவு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா கிங்ஸ், முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை காலிக்கு வழங்கியது.

காலி கிளடியேட்டர்ஸ் சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குசல் மெண்டீஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க அணிக்காக நல்ல தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.

முதல் பவர் பிளேயான 6 ஓவர்களின் நிறைவில் அவர்களின் அதிரடியால் 61 ஓட்டங்கள் பெறப்பட்டது. அதோடு நிற்காமல் 11 ஆவது ஓவரின் நிறைவில் முதல் விக்கெட் இணைப்பாட்டம் 100 ஓட்டங்களை கடந்தது.

பின்னர் இருவரும் மொத்தமாக 78 பந்துகளில் 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். எல்.பி.எல். போட்டி வரலாற்றில் அதிக ஓட்டங்களை பெற்ற இணைப்பாட்டமாக இது பதிவானது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவரான குணதிலக்க முதலில் 50 ஓட்டங்களை கடந்தார். இதற்காக அவருக்கு 34 பந்துகள் தேவைப்பட்டது. மறுபக்கம் குசல் மெண்டீஸ் மொத்மாக 33 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் பெற்றார்.

இந் நிலையில் 13.2 ஓவரில் திசர பெரேராவின் பந்து வீச்சில் குணதிலக்க மொத்தமாக 42 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

குணதிலக்க ஆட்டமிழந்தாலும், அதிரடியினை கைவிடாத குசல் மெண்டீஸ் தொடர்ந்தும் ஜப்னா கிங்ஸ் பந்து வீச்சாளர்களின் பந்துப் பரிமாற்றங்களை சிதறடித்து வந்தார்.

எனினும் அவர் 18.5 ஆவது ஓவரில் மொத்தமாக 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை பெற்று 85 ஓட்டங்களுடன் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை குவித்தது காலி அணி.

120 பந்துகளுக்கு 189 ஓட்டம் தேவை என்ற நோக்கில் கடினமாக இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஜப்னா அணியால் ஓவருக்கு 9.40 என்ற சராசரியை பராமரிப்பது சிக்கலாக அமைந்தது.

அது மாத்திரமன்றி நுவான் துசாரவின் பந்துப் பரிமாற்றங்களுக்கு முகங்கொடுக்க திணறிய காரணத்தினால் அணியின் முன்னணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர்.

இறுதியாக 16.5 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்ட அவர்கள் 124 ஓட்டங்களையும் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 64 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.

சேஸிங்கில் அவிஷ்க பெர்னாண்டோ முதல் பந்தில் அபார சிக்ஸர் அடித்தார், ஆனால் அமீரின் இரண்டாவது பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

ஜப்னா அணிக்கு பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தபோதிலும், ரமானுல்லா குர்பாஸ் மற்றும் 7 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோரைத் தவிர ஒரு துடுப்பாட்ட வீரரும் 10 ஓட்டங்களை எட்டுவதற்கு காலி கிளடியேட்டர்ஸ் பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.

37 பந்துகளை எதிர்கொண்ட குர்பாஸ் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் துசார பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

வனிந்து ஹசரங்கவும் 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களுடன் துசாரவின் பந்து வீச்சில் பிடிகொடுத்து வெளியேறினார்.

பந்து வீச்சில் துசார மொத்மாக 3.5 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 13 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அவர் தவிர புலின தரங்கா, மெஹமட் அமீர் மற்றும் மொஹமட் ஹப்பீஸ் ஆகியோரும் தமது பங்கிற்கு ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் காலி அணி நடப்பு லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது.

மறுபுறம் கிளாடியேட்டர்ஸ் அணியிடம் ஜப்னா கிங்ஸ் பெற்ற தொடர்ச்சியான மூன்றாவது தோல்வி இதுவாகும்.

இருந்த போதிலும் நாளை நடைபெறும் பிளே-ஆஃப் சுற்றின் வெளியேற்றல் போட்டியில் ஜப்னா கிங்ஸ், தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

இதில் வெற்றி பெறும் அணி 23 ஆம் திகதி காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here