கிழக்கு ஜேர்மனியின் லீப்ஜிக் (Leipzig) நகரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக் குறித்து விபரித்த சாக்ஸனி மாநில பொலிஸார் விபத்தில் மேலும் மரணங்கள் அதிகரிக்கலாம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பேர்லின் நகரையும் மூனிச் நகரையும் இணைக்கும் வீதியில் பேரூந்து வீதியை விட்டுவிலகியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் மூனிச் செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மீட்புப் பணிகளில் உலங்குவானூர்தி மற்றும் நோயாளர் காவு வண்டி என்பன ஈடுபட்டு இருந்தன.
மேலும் விபத்திற்கான உண்மையான காரணம் எதுவென இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவசர மீட்புப் பணியாளர்கள் விபத்து தொடர்பில் என்ன நடந்தது என ஆராய்ந்து வருகின்றனர்.
பேர்லினிலிருந்து சூரிச் நோக்கிப் பயணித்த குறித்த பேரூந்தில் சுமார் 53 பயணிகள் உட்பட இரண்டு சாரதிகள் பயணித்துள்ளனர்.