சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி பணிப்பாளர் கீதா கோபிநாத் இன்று (15) நாட்டிற்கு வருகை தருகிறார்.
அவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
அவர் தனது விஜயத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் – கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இலங்கை, பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் உள்ள அனுபவங்கள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம் மற்றும் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றும் முதன்மை பிரதிநிதி ஒருவர் நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த விஜயம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.