பொகவந்தலாவை கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்துயர் சம்பவம் நேற்று (03) மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தரம் மூன்றில் கல்வி பயிலும் லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனின் தந்தை வீடு நிர்மாணப் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தவேளை, சிறுவன் தனது கைகளை கழுவுவதற்காக வீட்டின் பின்புறத்தில் நீர் நிரம்பி காணப்பட்ட குழிக்கு அருகில் சென்றுள்ளார். இதன்போது அவர் தவறி விழுந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டநேரமாகியும் தனது மகனை காணவில்லை என்பதால், தந்தை விட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது சிறுவனின் பாதணிகள் இரண்டும் குழியில் மிதந்துகொண்டிருந்துள்ளன.
அதன் பிறகு சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே சிறுவன் உயிரழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.