க்ளப் வசந்தவுக்கு நுவரெலியா நகரில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு அனுதாபத்தை தெரிவித்த மக்கள்

0
47

நுவரெலியா நகரை பிறப்பிடமாக கொண்ட க்ளப் வசந்தவுக்கு நுவரெலியா நகர மக்களும் அஞ்சலி செலுத்தினர்.நுவரெலியா நகரில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிட்டு தமது அனுதாபத்தை நகர மக்கள் வெளிக்காட்டினர்.

அத்துருகிரிய ஒருவெல சந்தியில் கடந்த திங்கட்கிழமை (08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகர் க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டார்.

நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்ப கல்வியை நுவரெலியா அவலேடிஸ் பாடசாலையில் கற்றார்.பின் நுவரெலியா காமினி வித்தியாலயத்தில் கற்ற இவர் 1988 ஆம் ஆண்டு க.பொ.த (உயர் தர) பரீட்சையில் தோற்றி கணித பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவராக திகழ்ந்தார்.

பாடசாலை கல்வியை தொடர்ந்து நுவரெலியா நகரில் காமினி வசந்த என அழைக்கப்பட்ட இவர் சன்ஹில் ஹோட்டல் உரிமையாளரானார்.இதையடுத்து சன்ஹில் வசந்த என புனைபெயரில் அழைக்கப்பட்ட இவர் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற நுவரெலியா மாநகர சபை தேர்தலிலும் போட்டியிட்டார்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கிய வசந்த தோல்வியை தழுவிய பின் நுவரெலியாவிலிருந்து கொழும்பு பம்பலப்பிட்டி பகுதிக்கு சென்று விட்டார்.அங்கு தனது வர்த்தக நடவடிக்கையை தொடர்ந்த அவர் கெரோக்கி வசந்த பின் க்ளப் வசந்த என்ற புனைபெயரில் அழைக்கப்பட்டு பிரபல கோடீஸ்வர வர்த்தகரானார்.

கடந்த திங்கட்கிழமை (08) அத்துருகிரிய ஒருவெல சந்தியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவுக்காக அழைக்கப்பட்ட க்ளப் வசந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தார்.இவரின் இறுதி கிரியைகள் நுவரெலியாவில் இடம்பெற வேண்டும் என பலர் எதிர்பார்த்திருந்த போதிலும் அது கைக்கூடவில்லை.

இந்த நிலையில் வசந்தவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் உருவம் பொறித்த பதாதைகள் நுவரெலியா நகர மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டு,நகரில் வெள்ளை கொடிகள் பறக்கவிட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here