சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து உயிரிழந்த மாணவன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்ற 17 வயது ராம் மூர்த்தி தமிழ்மாறன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த மாணவன், ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்று நீர்தேக்கதில் விழுந்து காணாமல் போய் இருந்தார்.
அவரைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவன் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் கடந்த 9ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் (10) வெளியாகியிருந்த நிலையில் பரீட்சைப் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்து உயிரிழந்த மாணவனின் பெறுபேறுகள் வெளியாகியது.
குறித்த மாணவன் ஆங்கில மொழியில் கற்று 7A, 1B, 1C பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். அவரது பெறுபேறுகளே பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளாக வெளிவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனின் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட்ட குடும்பத்தினர் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் உள்ளிட்டோர் மனமுடைந்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.