தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஐந்நூறு சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுடன் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் தேயிலை தொழிற்துறையை முன்னேற்றுவதாக குறிப்பிட்டு சர்வதேச நாடுகளில் விளம்பரங்கள் வெளியிடுவதற்காக மாத்திரம் 1965 இலட்சம் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.
உலக வங்கியிடம் மாத்திரம் 48.9 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 60 வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த திட்டங்களுக்காக ,முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மனைவி, லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் மற்றும் சாலிய திசாநாயக்கவின் மனைவி ஆகியோரே பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தரமான தேயிலையை உற்பத்தி செய்யும் விதம், தேயிலை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் உரையாற்றிய அமைச்சர், இலங்கை தேயிலை நாமத்தை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்காக அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்றும் அழைப்பு விடுத்தார்.
சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இலங்கை தேயிலை சபை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக சேனாரத்ன,இரத்தினபுரி பிரதேச செயலாளர் கே.எஸ். நிசாந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.