தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை தொடர மேலும் 300 மில்லியன் நிதி உதவியை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்த நிதி வழங்கப்படுவதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதன்மூலம் இரு நாடுகளிடையே கலாசார, பொருளாதார, சமூக பரிமாற்றம் வலுவடைந்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான கடல்சார் இணைப்புக்கு புத்துயிரூட்டுவதில் கப்பல் போக்குவரத்து, ஒரு மைல்கல்லாக திகழ்கிறது” என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே ‘சிவகங்கை’ என்ற பயணிகள் படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது. சீரற்ற வானிலை காரணமாக சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேவைகள் மீண்டும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.