யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது 9 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 42ஆம் நாள் அகழ்வு யாழ். மேலதிக நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது 9 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 231ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 7 மனித என்புத் தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை 213 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.




